செப். 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தும், ஒரு சில இடங்களில் வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது
சென்னை நகரைப் பொறுத்தவரை சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே வடதமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழை நீடித்தது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.